SU RAVI'S PORTAL




Hi,
Welcome to "SWETHA PADHMAM"-(The White Lotus)-Abode of SARASWATHI-The Goddess of all forms of Fine-arts.My passions - MUSIC, ART & POETRY(TAMIL) are Shared herein. Welcome again to the White Lotus! Wish you a happy blogging!-Su.Ravi

Saturday, January 22, 2011

திரு.பஞ்சாபகேசன் ( அப்பா)

அப்பா (12/3/2010)

அப்பா இப்போது ஃபோட்டோவில் மட்டும்!

முப்பது ஆண்டுகளுக்கு முன், வசந்தியை மடியிருத்தி, எனக்குத் தாரை வார்த்துக் கன்னிகாதானம் செய்து கொடுத்த அன்று முதல் எனக்கும் அப்பா ஆனவர் அமரர் ஆகிவிட்டார்.

புதுக்கோட்டையில் துவங்கிய பயணம் புனேயில் முடிந்துவிட்டது.

"நெருனல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு."

வள்ளுவர் யாக்கை நிலையாமை பற்றித் தெளிவாகச் சொன்னாலும், 'நாம் சாஸ்வதம்' எனும் நினைப்பு நமக்கு!

யக்ஷப் ப்ரஸ்னத்தில் தருமன் பதில்தான் பொட்டில் அடித்தாற்போல் தெறிக்கிறது!

வியாழக் கிழமை இரவு விருந்தினர்களோடு சிரித்துக் கொண்டிருந்தவர், வெள்ளிக்கிழமை மதியம் பேத்தி பாரதி பறிமாற உணவருந்தி, உரையாடியவர், அடுத்த இரண்டு மணிகளில் இல்லை

-என்ற அதிர்ச்சியிலிருந்து மீளக் கூட முடியவில்லை.

எண்பது வயது கடந்தாலும், நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் நிறைந்த தன் வாழ்க்கை முறைகளால் மனத்தளவில் இருபது வயது இளைஞராக வளைய வந்தவர்;

காலையில் மேலசட்டை இன்றி, வேட்டிகட்டி,

நெற்றிநிறைந்த விபூதியும், துளசி, ருத்ராக்ஷ மாலைகளுமாக இருப்பவர் மாலையில் ஜீன்ஸ் பேன்ட், டிஷர்ட்,

ஸ்போர்ட்ஸ் ஷூ, கூலிங் கிளாஸ் சகிதமாக்ப் புறப்படுவார்.

மூலவருக்கும் உற்சவருக்கும் எத்தனை வேறுபாடு!

" எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து".

திட்டமிட்ட வாழ்க்கை, வரவுக்குள் செலவென்ற ஒரே தாரக மந்திரம், வீட்டு நிர்வாகப் பொறுப்பை முழுமையாகத் தானே சுமந்த தலைமைப் பண்பு, தளராத் சிவபக்தி, இளமையிலேயே டயபெடிஸ், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டும், மனம் தளராமல் போராடி, இறுதிவரை மிகக்கண்டிப்புடன் தன் உடல்நலம் பேணுவதில் தவறாமை, எல்லாவயதினரோடும் எவ்வளவு நேரமும் அலுப்பு தட்டாமல் உரையாடும் திறமை, புதியவர்களிடமும் வலியச்சென்று நட்பு பூணும் வேட்கை,

சங்கீதம், முதலாக நுண்கலைகளில் ரசனை, எழுபது வயதிலும்,. அமெரிக்காவில் இருக்கும் பேரனுடன் தொடர்பு கொள்ள

கம்ப்யூட்டரில் -மெயில் கற்றுக் கொண்ட விழைவு, புதிய எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக் கருவிகளில் ஆர்வம்,

அப்பா ஒரு சுவாரஸ்யமான குணசித்திரம்...

வானம் பொத்துக் கொண்டு மழை பொழிந்த அந்த மாலை நேரத்தில், திக்குத் தெரியாமல் நின்றிருந்த போது,

சுமார் பத்து மணிநேரம் தோளோடு தோள் நின்று, உத்விகள் செய்த எதிர் வீட்டு இளைஞர்கள் பீயூஷ், தினேஷ்,

உடனிருந்து உதவிய அலுவலக நண்பர்கள் அதுல், கிரண், பாலாஜி, HR department officer இனாம்தார், ambulance, Hospital.

Police என எல்லாத்துறையினரோடும் coordinate செய்து ஆகவேண்டிய காரியங்களை விரைவில் முடித்துத் தந்த்

அலுவலகத் துணை ஊழியர் பாண்டு. வீட்டில் அனைவருக்கும் எல்லா வேளைகளுக்கும் டீ, காஃபிமற்றும் உணவு

தயாரித்துக் கொடுத்த முகம் தெரியாத அண்டை வீட்டுக்காரர்கள்…. "தெய்வம் மனுஷ்ய ரூபேண" என உணர்த்திய

தருணங்கள் அவை...

இதோ, ஆயிற்று.

திங்கட்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து பாபு வந்ததும், அப்பாவின் பூத உடலின் இறுதிப் பயணம் முடிந்து, தகனத்திற்குப் பின் துலாப்பூர் திரிவேணி சங்கமத்தின் ச்ங்கமேஸ்வரர் ச்ன்னிதிக்கு எதிரில் அஸ்தியும்

கரைக்கப் பட்டு இரண்டுதினங்கள் ஓடிவிட்டன.

வந்த உறவுஜனங்கள் ஒவ்வொருவராகத் திரும்பிச்சென்று விட்டபின்,துயரங்களும், வேதனைகளும் படிப்படியாகக் குறைந்து அவற்றின் தழும்புகள் மட்டும் மீதமிருக்கின்றன.. மணல்வெளியில் பதிந்த காலடிச் சுவடுகள் போல, மனவெளியில் பதிந்துவிட்ட சோகச் சுவடுகள்.

சமையலறை மீண்டும் சுறுசுறுப்பாகிறது.

"ஆடிக் களைத்தான், சாப்பிட்டான்; அழுது களைத்தான் சாப்பிட்டான்" என்கிறது அவேரிய மலைஜாதியினரது பழமொழி.

பழமொழிகள் யதார்த்தத்தைப் புரியவைக்கும் வேத வாக்கியங்கள்!


" இருந்து சென்ற முன்னோரின்

இடத்திலெல்லாம் நாமின்று

விருந்து செய்து வாழ்கின்றோம்

விகடம் சொல்லி மகிழ்கின்றோம்

இருந்த இடம் விட்டு யாமும் இனி

எழுந்து சென்றால் இங்கிருந்து

விருந்து செய்வார் யார் யாரோ?

விகடம் சொல்வார் யார் யாரோ?"


ரவி

ஊழிக்கூத்தனின் ஊர்த்துவ தாண்டவம்

அப்பனே, அம்மை யோடு

ஆடலில் போட்டி என்றோர்

க்ற்பித்க் கார ணத்தைக்

காட்டியுன் நடனமாடும்

சொப்பன ஆசை யெல்லாம்

தீர்த்தனை போலும்;உந்தன்

ஒப்பிலா நாடகத்தை

உவக்கிறேன், சிதம்பரேசா!

காத்ணி கழற்றிப் போட்டுக்

காலினால் அணிய வென்று

பாதம்நீ உயர்த்தி யாடி

பார்வதி நாண வைத்தாய்!

காதலால் தோற்றா ளன்னை!

காதலே ஜெயித்தத்ங்கே!

ஓத்ரும் நாட கத்தை

உவக்கிறேன் சித்ம்பரேசா!

தீர்த்தமும், நிலவும் சூடி

தீர்க்கமாய் நிமிர்ந்தெழுந்து

பார்த்தவர் நெஞ்சம் எல்லாம்

பரவசம் பற்றிக் கொள்ள

ஆர்த்தெழும் பாதம் தூக்கி

அலட்சிய மாகச் செய்யும்

ஊர்த்துவ தாண்டவத்தை

உவக்கிறேன் சிதம்பரேசா!

உரகமும், பிறையும் சூடி

உமையவள் காணவென்று

கரணமோர் நூற்றி யெட்டும்

காட்டி நீ ஆடுகின்றாய்!

சரணமே உயர்த்தி ஆடும்

சங்கரா அதனைச் சற்றென்

சிரமிசை வைத்தாய் மேனி

சிலிர்க்கிறேன், சிதம்பரேசா!


சென்றவை எவையும் சற்றும்

சிந்தையைத் தின்ன வெண்டாம்!

ந்ன்றினி வரவிருக்கும்

நாட்களெல் லாம் சிறக்க

நின்னையே வேண்டி நின்றோம்!

நீயெமக் கருளல் வேண்டுல்

மன்றினில், மனத்தில் ஆடும்

மன்னனே,சிதம்பரேசா!

சு.ரவி

திருவரங்கத்து மரகதம்

வீடணன் விட்டுச் சென்ற

விலையிலாப் பொக்கிஷத்தை,

பாடலால் ஆழ்வாரெல்லம்

பரவிய பசுமைக் குன்றை

நீடுயர் மதில்சுழ் கோயில்

நிலைத்தருள் மரகதத்தைக்

கோடுலாம் ஓவியத்தில்

கொணர்ந்திடக் கூடுமாமோ?

பையரா அணையாய்க் கொண்டு

பைந்துழாய் மாலை சூடி

மையலால் ஆழ்வார் வாக்கில்

மயங்கியே கிடக்கும் மாலை

செய்களசூழ் அரங்கக் கோயில்

சேர்ந்தருள் மரகதத்தைக்

கையினால் வரையும் கோட்டில்

காட்டுதல் சாத்யம் ஆமோ?

நடையிலே ஏறாய், சிந்தும்

நகையிலே நிலவாய், ஆங்கே

இடையறா அமுதாய் ஆழ்வார்

இசைத்தமிழ் பருகும் மாலை,

உடையவர் முறைசெய் கோயில்

உவந்தருள் மரகதத்தைக்

கடையவன் கருப்பு வெள்ளைக்

கோட்டிலே காட்டப் போமோ?

காவிரி சூழச் செல்லும்

கவின்மிகும் தீவுக்குள்ளே

ஆவலோ(டு) அரையர் சேவை

அனுபவித் திருக்கும் மாலை

காவியம் கண்ட கோயில்

கண்வளர் மரகதத்தை

ஓவியக் கோட்டுக் குள்ளே

ஒருவனால் தீட்டப் போமோ?


களிதரும் தமிழ்வே தத்தைக்

கணந்தொறும் பருகும் மாலை

ஒளியுற உயர்ந்த கோயில்

உள்ளுறும் மரகதத்தை

உளியினால் செய்யும் சிற்பம்

ஊசியால் முனைந்தாற் போலே

எளியவன் வரைந்து பார்த்தேன்!

என்தின9வு) அடக்கப் போமோ?

சு.ரவி