SU RAVI'S PORTAL




Hi,
Welcome to "SWETHA PADHMAM"-(The White Lotus)-Abode of SARASWATHI-The Goddess of all forms of Fine-arts.My passions - MUSIC, ART & POETRY(TAMIL) are Shared herein. Welcome again to the White Lotus! Wish you a happy blogging!-Su.Ravi

Friday, August 17, 2012

ஐயப்பன் கீர்த்தனைகள் பகுதி 2

நண்பர் நாராயணனின் குரலில் மேலும் சில ஐயப்பன் கீர்த்தனைகளைக்
கீழ்வரும் வலைத்தள இணைப்பில் கேட்டு ரசிக்கலாம்.

http://archive.org/details/IyyappanKiirththanaiVol2
 
3 Track களில் உள்ள இந்தப் பாடல்களைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:


1.         நினைத்ததுமே மெய்சிலிர்க்குதையா- ரீதிகௌள ராகம்

      நாராயணன், க.ரவி ஆகியோருடன் கட்டுநிறைக்காகத் திருச்சிக்கு ராக்ஃபோர்ட்டில் இரவுப் பயணம்.
      எங்களை மிகவும் ஈர்த்த ரீதி கௌள ராகத்தில், நாராயணன் இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாட
      க.ரவியும், சு.ரவியும் மாறி,மாறி ஆளுக்கொரு வரி எனப் பாடி நிறைவு செய்த பாடலிது.

           ( இது போன இணைப்பின் இறுதிப் பாடல். பாடலின் பிற்பகுதி இங்கே ஒலிக்கிறது)

2.         சபரிமலையின் ஐயனே உனைச் சரணடைந்தேன் மெய்யனே-  மாயாமாளவகௌள ராகம்.

            1985 டிசம்பர் மாதம். மனைவி, 5 வயதுப் பெண்குழந்தை சென்னையிலிருக்க, தனியே கல்கத்தா வாசம்.
      மலைக்குச் செல்ல விரதம். மாலை பணிமுடிந்து, ஹூக்ளி நதியில் படகிலன் மேல்தளத்திலமர்ந்து
      வீடுதிரும்பும் நேரம்.சுமார் 8 டிகிரி குளிர். மனைவி, மக்கள் என்று பாசத்திலும், நேசத்திலும் மனம் மயங்கிய
      தருணம். அந்த mystic சூழலுக்கும், மனநிலைக்கும் ஏற்ப, மாயாமாளவகௌள ராகத்தில் பிறந்த
      பாடல்.

3.        பொன்னம்பலம் அது எங்கள் மனம்- ஹிந்தோளம் ராகம்.

           "நேரார்  தமக்கு    நெருப்பென    நிற்கும் நிமலநின்தன்
      தாரார்  தடந்தோள் தரிசிக்க வேண்டித் தவிக்குமன்பர்க்(கு)
      ஓரோர் கணமும் ஒருயுக     மாக     வளர்ந்துவெய்யோன்
      தேரார்ந்த அச்சு  முறிந்ததே  போலத்    தெரிகின்றதே!

      என்று எழுந்த விருத்தத்திற்கு contrast ஆக, 
            " ஐயனைத்  தரிசிக்கும் கணம் ஒரு யுகமாக நிலைக்கும் படி இந்த உலகம் உருளாமல் உடனே உறையட்டும்
       என்ற பிரார்த்தனையோடு பிறந்த பாடல்.

4.        வாள்வாங்கி வீற்றிருக்கும் வாழ்வே - கரஹரப்ரியா ராகம்

     மிகுந்த பிரயாசைகளுக்குப் பின் கிடைத்த அச்சங்கோவில் தரிசனம்.
     ஐயன் கையில் வாளேந்தி அரசகோலத்தில் வீற்றிருக்கும் காட்சி.
     முழுக் களபச் சாத்து- சந்தனக் காப்பு- கருணைபொழியும் கருவிழிகள் திறந்து, சிவப்பு நிறத்தில் உதடுகள் எழுதி
     அழகுமேனியனாக எதிரே ஒளிர்ந்த வீரத்திருமேனி கண்டு கரஹரப்ரியாவில், சரணத்தில் ராகமுத்திரையோடு
     பிறந்த பாடல்.

5.      உன்னைத்தான் சரணமென்று - தோடி ராகம்

    போன இணைப்பில் எழுதியபடி, பூர்விகல்யாணியைத் தொடர்ந்து, அதே வருடம் பயணத்தின் போது, நண்பன்
    நாராயணன் ஆலாபனை செய்ய, பெருவழியில் பிறந்த இரண்டாவது கீர்த்தனை. இதிலும் பல்லவி, அநுபல்லவி,
    மத்யமகாலம், சரணங்கள், மத்யம காலம் என்ற ஃபார்மேட்டில், 'குருதாஸ' எனற முத்திரையும்,
    பல்லவியில் சூசித ராகமுத்திரையும் அமைந்துள்ளன.

6.     சபரி எங்கள் தாயகம் - ஜோன்புரி ராகம்

    நண்பர் நாராயணனின் மேல்ஸ்தாயி சஞ்சாரங்களும், பிருகாக்களும் கொடுத்த உந்துதல்தான்
    ஜோன்புரியில் பிறந்த இந்தப்பாடல். பாடலை முழுமையாகப் பாடுகையில் ஒவ்வொரு
    சரணத்திற்கும் இடையில் ஒரு சரண விளி இருந்தால் இன்னும் நிறைவாக இருக்குமே என்று
    கருதி, இவ்விணைப்புகள் சேர்க்கப் பட்டன.

7.    விழிவேண்டல் விருத்தம் - கேதாரகௌள + தன்யாசி ராகங்கள்
   விழிவேண்டல் பதிகம்- ராகமாலிகை

      1987 ஆம் வருடம். எங்கள் பெரியகுருஸ்வாமி ( தற்போதைய குருவின் தந்தையார்)
   அமரர் திரு. ராமச்சந்திரன் குருஸ்வாமி அவர்கள் விழிப்பார்வை குன்றி சிகிச்சை
   பெற்ற போது ஐயப்பனை வேண்டிப் பாடிய விருத்தமும் பதிகமும். நண்பன்
   நாராயணனின் ராகஞானத்திற்கு இந்த ராகமாலிகை ஒரு பெரும் சான்று.

8. ஓடும் என்மனம் ஒடுங்காதா- தேவகாந்தாரி ராகம்

  இந்தப் பாடலின் பல்லவி முதலில் ஸஹானா ராகத்தில்தான் என்னுள் பிறந்தது.
 ஆனால், நண்பன் நாராயணன் இதை தேவகாந்தாரியில் முயற்சி செய்தபோது அது இன்னும்
 அழகாகப் பொருந்தி ஒலித்தது. பெங்களூர் ராஜா ஐயங்காரின் "க்‌ஷீர ஸாகர சயனா" கேட்ட்
  நினைவுப் பதிவு இந்தப் பாடலின் அமைப்புக்குப் பெரிதும் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்.

9. அடியவர் மனமென்னும் ஊஞ்சலிலே ஆட- குறிஞ்சி

    ஒருமாறுதலுக்கு, நாராயணனே எழுதி இசைத்த இந்தக் குறிஞ்சி ராகப் பாடல் ஐயப்பனை
    ஊஞ்சலில் அமர்த்தி, ஆடவைத்து லாலி பாடி அழகுபார்க்கிறது.

10.   ஆரத்திப் பாடல் 

 ஸாயி ஆரத்திப் பாடல் கேட்ட பாதிப்பில், ஐயப்பனுக்கு எழுதிய ஆரத்திப் பாடல்


கேட்க, ரசிக்க….


சு.ரவி

ஐயப்பன் கீர்த்தனைகள் பகுதி 1

என் சபரிமலைப் பயணங்களை இசைப்பயணங்களாக மாற்றியதில் பெரும்பங்கு
என்நண்பன் V.K  நாராயணனையே சாரும்.

1980- 2000 களில் சபரிமலைப்பயணங்களின் போது, வழிநடையில் நாராயணனின் ராக ஆலாபனைகளைத் தொடர்ந்த
இசைப்பாடல்களாகவோ, என்னில் உதித்த பாடல்களின் இசைவடிவங்களாகவோ உருவெடுத்த பாடல்கள் இவை.

பலவருடங்களுக்கு முன் ஒரு மதியப்பொழுதில் என் இல்லத்தில் ஒரு MONO டேப் ரெகார்டரில் சுருதிப்பெட்டியுடன்
நாராயணனின் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை வலைத்தளத்தில் ஏற்றி, அந்த இணைப்பைக் கீழே தருகிறேன்.

http://archive.org/details/Su.raviIyyappanKeerththanaikal


3 Track களில் உள்ள இந்தப் பாடல்களைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:

1. என்மனம் ஆனந்தக் கூத்தாடுதே- கமாஸ் ராகம்:
   
  பெரிய குருஸ்வாமி திருச்சியில் இருந்ததால் கட்டுநிறை திருச்சியில்.
  ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் திருச்சிக்குச் செல்லும் போது கமாஸ் ராகத்தில்
  நாராயணன் ஆரம்பித்த  பல்லவி விழுப்புரம் வருவதற்குள் நிறைவு செய்யப்பட்டு இசைவடிவமும் பெற்றது.
  சரணத்தில் வரும் சூசித ராகமுத்திரைக்கு ( சுகமா சுகமா என) inspiration கொத்தமங்கலம் சுப்புவின்
  தில்லானாமோகனாம்பாள் நாவலில் வரும் 'கமாஸ்' கிட்டாவையர் சொல்லும் dialog.

2. மழைச்சாரல் வரவேற்குது- அம்ருதவர்ஷிணி ராகம்

   சபரி மலையிலிருந்து திரும்பும் வழியில் வேனில் அச்சங்கோவில் செல்கிறோம்.இயற்கைஎழில்கொஞ்சும்
   வனப்பகுயதியில், அச்சங்கோவில் மலை மீது வேன் செல்லும்போது பூந்தூரலாக மழை பன்னீர் தெளிக்கின்றது.
   பஞ்சுப் பொதிகளாக மேகங்கள் தவழ்கின்றன. நாராயணனின் உற்சாகக் குரலில் அம்ருதவர்ஷிணி ராகம் பீறிட்டுவர
   பாடல் பிறந்து சன்னிதானம் சேர்வதற்குள் நிறைவடைகிறது, வன் புலியேறும் ராவுத்தனுக்குக்.காணிக்கையாக!

3.'உனைக் காணும் வரை கண்கள் மூடாது- ஷண்முகப்ரியா ராகம்

  மற்றுமோர் ஜனவரி மாதம் சபரிமலைப் பயணம்.  சென்னையிலிருந்து வேன் ஒன்றில் நாங்கள் 12 ஐயப்பன்மார் திருச்சிக்குப்                           போய்க்கொண்டிருந்தோம்.  நள்ளிரவு.  பாடல்கள் ஓய்ந்து அவரவர் கண்ணயரும் தருணம்.ஓட்டுனருக்கு அருகில் உறங்காமல் மௌனமாக நான்.
பின்ஸீட்டிலிருந்து ஓர் ஐயப்பன் " என்ன, சு.ர. தூங்கிட்டியா" என்று குரலெழுப்ப, அவருக்கு விடையாக ஷண்முகப்ரியாவில் எழுந்த பதில்.
சரணத்தில் 'நினைப் பாட' என்ற வரிகளை ஒவ்வொரு சரண முடிவிலும் நிரவல் செய்து பாடுமாறு
அமையப்பெற்றபாடல்.
  
4. சரீர வீணை தன்னிலும் சங்கீதம் கேட்குது-அமீர்கல்யாணி ராகம்

   1987/88 வருடம் என்று நினைவு. எண்ணூர்ஃபவுண்டரி நிறுவனத்தில் பணி. ஒருநாள்காலை 8:00 மணிக்கு நணபன் க.ரவி  தொலைபேசியில் அழைத்தான்.
" சு.ர, 'அமரத்வனி- 2'  கேஸட்- ஐயப்பன் மீது- இன்று ஒலிப்பதிவு- நணபன் K.S ராஜகோபால் பாட, என் இசையில் சங்கீதா நிறுவனம் தயாரிக்கிறது.  9: 30 க்கு மறுபடி அழைக்கிறேன்.நீ ஒரு பாடல் தயார் செய்து தா"
அமீர் கல்யாணியில் அப்போது உருவான பாடல்.
 பாடலை முழுவதும் ஃபோனில் கேட்ட க.ரவி, பாடலின் இறுதியில் அமைந்த சந்தப் பகுதியைப் பாடுவது கடினமாக இருக்கும் எனக்கருதி வேறு பாடலைக் கேட்க, தர்பாரி கானடாவில் " பூதமைந்தும்" என்ற பாடலை அளித்தேன்.
கேஸட்டில் இடம் பெறாவிடினும், நாராயணனின் குரலில் எங்கள் ஐயப்பன் பஜனைகளில் இப்பாடல் இடம் பெறும்.

5.வானவர் போற்றிட- பூர்விகல்யாணி ராகம்

  கர்நாடக சங்கீதம்(வீணை) பயில்கையில், கீர்த்தனைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலகட்டம். நாராயணனை ராக அலாபனை செய்யச்
    சொல்லி நான் பயணத்தின் போது உருவாக்கிய முதல் கீர்த்தனை. இப்பாடலிலும், இதனை அடுத்து உருவாக்கிய தோடி ராகக்
    கீர்த்தனையிலும் பல்லவி, அநுபல்லவி, மத்யமகாலம், சணங்கள், மத்யம காலம் என்ற ஃபார்மேட்டில், 'குருதாஸ' எனற
    முத்திரையும், ராகமுத்திரையும் அமைந்துள்ளன.

6. உனையொருகணம் நினைவதும்- மலயமாருதம் ராகம்

   தரிசனம் முடித்து, மலையிலிருந்து திரும்புகிறோம். நண்பன் க.ரவி " பாடல் தொட்டுத்திறக்குமா நுழைவாயிற் கதவங்கள்"
   என்ற கவிதையை ஆசுகவியாகப் பொழிந்தான். சுகமாக வீசிய மலயமாருதமும், கவிதையும், ஐயனின் தரிசன அனுபவமும்
   உள்ளுருக்க, மலயமாருதத்தில் உருவான பாடல். 99% குறில்களால் அமைந்த பாடல்.

7.  அஹங்காரத்திரை அறுபடுமோ-  சுப பந்துவராளி ராகம்

     மஹனீயர் தியாகைய்யரின் 'தெரதீயகராதா' கீர்த்தனை கொடுத்த உந்துதல் இந்த சுபபந்துவராளி.
     சரணத்தில் வரும் கருத்துக்கு Inspiration கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் வரிகள்
          " அங்கவ் வயனும் இருக்க ஒட்டான்"-
      அங்கே பிரமனும் இருக்க விடமாட்டான் - இங்கே யமனும் தங்க விடமாட்டான்"  என்கிற யதார்த்த உண்மை.

     நாராயணன் ஒரு சுபபந்துவராளி ஸ்பெஷலிஸ்ட்- செம்மங்குடி மாமாவின் 'ஸ்ரீ சத்ய நாராயணம்:" வழி…

8. நெஞ்செலாம் நின் ராஜ்யம்- ரஞ்சனி ராகம்

     பாடலின் இறுதியில் வரும் சிட்டை ஸ்வரம் நாராயணனின் கற்பனை.  'ரஞசனி', நாராயணனுக்கு மிகவும்
     நெருக்கமான ராகம். இதில் திருமதி.ரஞ்சனிநாராயணனுக்கு விருப்பம்தான்!

9.  தவத்தில் நிலைத்த தயைவடிவம்- சிந்துபைரவி ராகம்

     அந்த வருடப் பயணத்தில் எங்களுடன் என் லேலண்லட் தோழன் கிருஷ்ணன் சேர்ந்து கொண்டான்.
     (T.K.S. சகோதரர்களில் இரண்டாவது சகோதரர் திரு. டி.கே. முத்துஸ்வாமி அவர்களின் இரண்டாவது
     மகன் கிருஷ்ணன். அற்புதமான குரல்வளம் - இவனுக்காக, அந்த கால ஹிந்தி, தமிழ்ப்படப் பாடல்களின்
     மெட்டில் இயற்றிக்கொடுத்த ஸ்வாமி பாடல்கள் பல. எங்களுடன் ஒருமுறையே மலைக்கு வந்த கிருஷ்ணன்
     இன்று மறைந்துவிட்டான்).

     எருமேலியில், ஒரு கீர்த்தனை எப்படி உருவாகிறது என்ற அவன் கேள்விக்கு விடையாக, நாராயணன் பாட,
     சிந்துபைரவியில் உருவான கீர்த்தனை.

          ( இதே பயணத்தில் திரும்பும் போது, கிருஷ்ணன் 'ஹரிவராஸனம்'   HUM  செய்ய, அதே மெட்டில்
             "விரியும் வானெலாம்'   பாடல் பிறந்தது வேறு அனுபவம்)


10.  நினைத்ததுமே மெய்சிலிர்க்குதையா- ரீதிகௌள ராகம்

      நாராயணன், க.ரவி ஆகியோருடன் கட்டுநிறைக்காகத் திருச்சிக்கு ராக்ஃபோர்ட்டில் இரவுப் பயணம்.
      எங்களை மிகவும் ஈர்த்த ரீதி கௌள ராகத்தில், நாராயணன் இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாட
      க.ரவியும், சு.ரவியும் மாறி,மாறி ஆளுக்கொரு வரி எனப் பாடி நிறைவு செய்த பாடலிது.

           ( இதன் தொடர்ச்சி ஒரிஜினல் கேஸட்டின் மறுபகுதிக்குப் போய் விட்டதால், நான் பிற்பாடு Up-Load செய்ய இருக்கும்
             C.D.யில் கேட்கலாம்)


கேட்க, ரஸிக்க….


சு.ரவி   

விடையேறும் எங்கள் பரமன்













சடைவார்குழல்   நதியோடொரு   மதிசூடிய     பெருமான்
கொடியாமிடை   உடையாள்உமை ஒருபோதிலும் பிரியான்   
தடையாவையும்  பொடியாய்விழ   உடனேஅருள் புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

பனிவார்சடை    அரவோடொரு  பிறைசூடிய    பெருமான்
கனிவாய்மொழி   கருணாகரி     கணமேயினும்  பிரியான்
இனியோரிடர்     தொடராவணம் இனிதேயருள்   புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

முகிலோடிய      சடைமீதினில்   நிலவோடிய   பெருமான்
துகில்மூடிய       நகிலாள்உமை  துணையோர்கணம் பிரியான்
புகல்நாடிய        அடியாரிடர்     கெடவேஅருள்   புரிவான்
விடைவாகனன்    பதமேகதி        எனநாடுக    மனமே!

புகைபோல்படர்    சடைமீதினில்    புனல்சூடிய   பெருமான்
முகைபோலிரு    முலையாள்உமை முகமோர்கணம் பிரியான்
பகை, நோய்,பிணி அணுகாவணம்    பதமாயருள் புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

மலர்சூடிய     சடைமீதினில்     மதிசூடிய    பெருமான்
லலிதாம்பிகை  உமையாள்இடம்  ஒருவேளையும் பிரியான்
கலியாம்விதி   தொடராவணம்    கடிதேயருள்  புரிவான்
விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

சு.ரவி

Labels: